Pages

Friday, January 31, 2014

கருத்தடை மாத்திரைகள் பாதுகாப்பானவையா ?

Contraception pills safe?

கர்ப்பமாவதைத் தவிர்க்க அல்லது மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்த உலகெங்கும் 7 கோடி பெண்கள் மாத்திரைகள் உபயோகிக்கிறார்கள்.  கருத்தடை மாத்திரையைப் பற்றி அனேக பெண்களுக்கும் குழப்பங்கள் உண்டு. அது பாதுகாப்பானதா, பக்க விளைவுகளை ஏற்படுத்துமா, நிறுத்திய  பிறகு குழந்தை பிறக்குமா? என ஆயிரம் கேள்விகள்... கருத்தடை மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதை முதலில் தெரிந்து கொண்டாலே  இந்தக் குழப்பங்கள் நீங்கும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘‘உங்கள் கருப்பையில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜென், ப்ரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை போலவே செயற்கை (சிந்தெடிக்) ஹார்மோன்களால்  ஆனது மாத்திரை. கருப்பை வேலை செய்வது போல எண்ணி, உங்கள் உடலை ஏமாறச் செய்கிறது மாத்திரை. ஆகவே அவை ஒரு முட்டையை  உண்டாக்கவில்லையானால் நீங்கள் கர்ப்பமுற முடியாது. கருப்பை வாயில் உண்டாகும் கொழகொழவென்ற திரவத்தையும் மாற்றுகிறது மாத்திரை.

இந்த கொழகொழ திரவத்தின் வழியே விந்து, கருப்பையை அடைவதைத் தாமதப்படுத்துகிறது. நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது,  ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும். அதை நிறுத்த முடிவு செய்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தை உண்டாகும். மார்க்கெட்டில் கிடைக்கும்  பெரும்பாலான மாத்திரைகள் 21 நாட்கள் டோஸ் திட்ட முறையாகும்.

முதல் தடவை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, சிலருக்கு மாதவிடாய் சுழற்சியின் முதல் நாளன்று முதல் மாத்திரையை எடுத்துக்  கொள்ள வேண்டும். எந்தத் திட்ட முறையை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ, அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள். பேக்கேஜ் மீது  கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி, மாத்திரைகளை தினமும் அதே நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒரு மாத்திரை வீதம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடுத்தடுத்த பேக்கும், 7 நாட்கள் மாத்திரை  இன்றி விடப்பட்டு 29-ம் நாளில் ஆரம்பிக்க வேண்டும். கடைசி மாத்திரைக்கு 2-3 நாள்களுக்குப் பிறகு மாதவிடாய் தொடங்குகிறது. அடுத்த பேக்  ஆரம்பிக்கும் முன், மாதவிடாய் முடிந்திருக்காது.

முதலில் மாத்திரை சாப்பிடத் தொடங்கும் போது உங்களுக்கு ஒரு சிறிது ரத்தக் கசிவு ஏற்படலாம். அது உங்களுக்கு வழக்கமாக மாதவிடாய் வருவது  போன்றதே. தலைவலி, வாந்தி, குமட்டல், கான்டாக்ட் லென்ஸ் போட்டுக் கொள்வதில் சிரமம் போன்ற வேறு சில ஆரம்ப சிறு பக்க விளைவுகளும்  இருக்கலாம். மாத்திரை எடுத்துக் கொள்வதை ஒருநாளும் தவறவிட வேண்டாம்.

முதல் 3 மாதங்களுக்குப் பிறகு பக்க விளைவுகள் மறைந்து விடுகின்றன. மறையாவிட்டால் மருத்துவரைப் பார்க்கலாம். சிறந்த முறையில் வேலை  செய்யும் மற்றொரு மாத்திரையை அவர் உங்களுக்கு மாற்றித் தருவார். பக்க விளைவுகளுக்குப் பயந்து கொண்டு மாத்திரைகளை நிறுத்திவிட  வேண்டாம்.

மாத்திரை எடுத்துக் கொள்வதை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தவறினால் நீங்கள் கர்ப்பமுறக் கூடும். தினமும் அதே நேரத்தில்  எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மாத்திரை வேலை செய்யாமல் போகலாம். நீங்கள் மாத்திரை எடுத்துக் கொள்ள ஆரம்பித்த தினத்தை நினைவில்  கொள்ள வேண்டும். மேலும் ஒரு மாத்திரையை எடுத்துக் கொள்ளத் தவறினால், எப்போதும் கைவசம் ஆணுறை மாதிரியான வேறு கருத்தடை  சாதனங்களை வைத்திருப்பது பாதுகாப்பானது...’’ என்கிறார்.

No comments:

Post a Comment