Pages

Tuesday, January 28, 2014

சினைப்பை நீர்க்கட்டிகள் எப்படி உருவாகிறது?

இதற்கு சினைப்பை நீர்க்கட்டிகள் 10 சதவீதம் காரணமாக இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள் கூறுகின்றன. கருத்தரிக்க முடியாமல் போகும் பெண்கள் குடும்பத்திலும், சமூகத்திலும் நித்தமும் பல எண்ணற்ற போராட்டங்களை சந்திக்கின்றனர்.
சினைப்பை நீர்க்கட்டிகளை உடைய பெண்களுக்கு ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கின்றன. அதிலும் குறிப்பாக டெஸ்டோஸ்டிரான் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது தடைபடுகிறது.
இதில் பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் உள்ளது.
பெரும்பாலும் 1 முதல் 5 விழுக்காடு வரையிலான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தற்காலத்தில் அதிகமாக ஏற்பட மனித வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிலக்கு சுழற்சி சரிவர இருக்காது. 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி நிகழும். சிலருக்கு மாதவிலக்கு குறைவாக வெளிப்படும்.
இவ்வாறு மாதவிலக்கு தள்ளிப்போவது பல பிரச்சினைகளுக்கு வழிகோலுகிறது. உடல் எடை அதிகரிக்கிறது. ஆண்மைத் தன்மை பெண்களுக்கு மிகுதியாகிறது. ஆண்களைப் போல இவர்களுக்கு லேசாக முகத்தில் ரோமம் வளர ஆரம்பிக்கிறது. தேகத்திலும் ரோமங்கள் வளரும். சினைப்பைகள் அளவில் பெரிதாகும். சினைப்பை நீர்க் கட்டிகளில் நீர் சேர்வதே இதற்கு காரணமாகும்.
சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணங்கள்:
நோயுண்டாக்கும் காரணத்தை அறுதியிட்டு கூற முடியுமா எனில் இயலாது என்றுதான் கூறவேண்டும். இந்நோய் பெரும்பாலும் பருவமடைந்த மங்கைகளில் காணப்படும். எனினும் இதன் அறிகுறிகள் கருத்தரிக்கும் காலத்தில்தான் வெளியே தெரிய ஆரம்பிக்கிறது.
மரபணு மூலமாகவும், பரம்பரையாகவும் இந்நோய் வரலாம்.
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது. சிலநேரங்களில் ஹார்மோன் குறைந்து காணும். சிலநேரங்களில் ஹார்மோன் அதிகரித்துக் காணும். சில சமயங்களில் அட்ரீனல் காட்டிகல் ஹார்மோன்கள் அதிகரித்துக் காணும்.
டெஸ்டோஸ்டிரான் அதிகரித்துக் காணும்.
புரோலாக்டின் அதிகரித்துக் காணும்.
மாதவிடாய் கோளாறுகள்
ஒரு பெண் பூப்பெய்திய பின் முறையாக மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு உண்டாகும். இது இயல்பானது. ஆனால் இந்நோய் கண்ட சிலருக்கு மாதந்தோறும் மாதவிலக்கு நிகழாது. சில பெண்களில் மாதவிலக்கு ஏற்பட்டாலும் சினைமுட்டை வளர்ச்சியின்றி மாதவிடாய் நிகழும். இயல்பாக பெண்களில் மாதந்தோறும் சினைப்பையில் இருந்து ஒரு சினைமுட்டை வளர்ந்து வெளிப்படுகிறது.
0.5-1 மி.மீ. அளவிலான கட்டிகள் சினைப்பையில் ஓரத்தில் காணப்படும். பத்துக்கு மேற்பட்ட கட்டிகள் காணப்படும். 20 மி.மீ. அளவுக்கு மேல் கட்டிகள் பெரும்பாலும் பெரிதாவதில்லை. சினைப்பையின் மேற்பரப்பில் நெக்லஸ் அமைப்பில் ஸ்கேன் சோதனையில் கட்டிகள் காணும். சினைப்பை அளவில் பெரிதாக காணப்படும்.
இந்நோயுற்ற பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். இடுப்பு சுற்றளவு 35 அங்குலத்திற்கு அதிகமாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க ஆரம்பித்தவுடன் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளல் அவசியம்.
மலட்டுத் தன்மை:
சினைப்பை நீர்கட்டிகள் பெண்களுக்கு உண்டாகும் மலட்டுத் தன்மைக்கு 30% வரை காரணமாக இருக்கிறது. சாதாரணமாக கருத்தரிக்க இயலாமல் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான பெண்களுக்கு இந்நோய் இருக்கிறது. இதற்கு சிகிச்சையளித்தாலே கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
முடி வளர்ச்சி:
பெரும்பாலும் பெண்களுக்கு முகத்திலும், உடலிலும் அதிகளவில் முடிகள் இருப்பதில்லை. இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும்.
குறிப்பாக மேலுதடு, கீழ்தாடை, மார்பு, முதுகு, அடிவயிறு, தொடை, முன் கைகளில் முடி வளர்ச்சி காணப்படும்.
தோலில் காணப்படும் மாற்றங்கள்
உடலில் சில இடங்களில் கருமை நிறம் அதிகரித்து காணும்.
பெரும்பாலும் கழுத்து, தொடையின் உட்பகுதி, அக்குள் பகுதிகளில் இம்மாற்றம் காணப்படுகிறது.
 ஆய்வுகூடத் தேர்வுகள்
ஸ்கேன் பரிசோதனை செய்வதன் மூலம் சினைப்பை நீர்க்கட்டிகளை உறுதிப்படுத்தலாம்.
ஹார்மோன்களின் அளவுகளை பரிசோதனை செய்வதன் மூலமும் கண்டறியலாம்.
மருத்துவம் மற்றும் ஆலோசனைகள்:
சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கின்றன என்பதை சூதகதடை, உடல் எடை அதிகரித்தல் போன்ற அறிகுணங்களைக் கொண்டு யூகிக்கும்போது அல்லது மருத்துவப் பரிசோதனையில் கண்டுபிடிக்கும்போது பெண்கள் செய்யவேண்டிய முதற் காரியம் அவர்களது உடல் எடையை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதேயாகும்.
உடல் எடையை குறைத்தல்:
தினமும் காலை அல்லது மாலை வேளையில் 2 முதல் 3 கி.மீ தொலைவு வரை நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நடைபயிற்சி மேற் கொள்வதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கின்றன. நடைபயிற்சி மூலம் ஒரு மாத காலத்திலேயே நல்ல பலனை அடையலாம்.
நடை பயிற்சியுடன் உணவு கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், இனிப்பு வகைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இயற்கை உணவுகளான காய்கறி, கீரை இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.
மாதவிடாய் சீராக:
சினைமுட்டை முதிர்ச்சியடைந்து வெளிப் படுதலைத் தூண்ட ஆங்கில மருத்துவர்கள் ஹார்மோன் சிகிச்சை அளிக்கின்றனர். பொதுவாக இம்மாதிரியான சிகிச்சையால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதை மறுப்பதிற்கில்லை.
எனவே சினைப்பை நீர்க்கட்டிகளுக்கு ஏற்ற மருத்துவம் சித்த மருத்துவமே என்று கூறலாம். உணவே மருந்து, மருந்தே உணவு என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுவதால் பக்க விளைவுகளின்றி அறுவை சிகிச்சையின்றி சினைப்பை நீர்க்கட்டிகளை அகற்றிவிடலாம்.
சினைப்பை நீர்க்கட்டிகள் கரைய தொடங்குகின்ற போதே சினைமுட்டைகள் முதிர்ச்சியடைந்து வெளிப்படும் சூழல் உருவாகிறது.
புகைப்பிடிக்கும் பெண்களாக இருந்தால் அந்த பழக்கத்தை அறவே விடவேண்டும். புகைப் பிடிப்பதால் ஹார்மோன் அளவுகளில் மாற்றம் ஏற்படுகிறது.
முடிகளை நீக்குவதற்கு பல வழிகள் இருக்கிறது. சவரம் செய்தல், பிளீச்சிங் செய்தல், வாக்சிங் செய்தல் போன்ற முறைகளை கையாளுவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை நாடவேண்டியது அவசியம். எலக்ரோலைசிஸ் மற்றும் லேசர் முறையில் தற்போது முடிகளை சிறப்பாக நீக்குகின்றனர். ஆனால் செலவு அதிகம்.
தகுந்த சிகிச்சை மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு கண்டிப்பாக உண்டாகும் என்பதால் சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது இன்றியமையாததாகும்.

No comments:

Post a Comment