Pages

Friday, January 31, 2014

அந்த மூன்று நாட்கள்

The three days
‘பெண்களுக்கு உண்டாகிற ஹார்மோன் கோளாறுகளுக்கும், அவை உண்டாக்கும் பிரச்னைகளுக்கும் பஞ்சமே இல்லை. அவற்றில் முக்கியமானது  ‘டியுபி’ எனப்படுகிற Dysfunctional uterine bleeding. காரணமே இல்லாமல் மாதவிலக்கின் போது ரத்தப் போக்கு அதிகமிருப்பவர்களுக்கு இந்தப்  பிரச்னை பின்னணியாக இருக்கலாம்...’’ என்கிற மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ், இதைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.

‘‘மாதவிலக்கான முதல் 2 வாரங்கள்ல பெண்களோட உடம்புல ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். 2 வாரங்கள் கழிச்சுதான் கருமுட்டை  வெளியாகும். அதுக்குப் பிறகுதான் பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சுரக்கும். இதுதான் முறை. சிலருக்கு கரு முட்டை உற்பத்தியே இருக்காது.  ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகமாகி, பிராஜெஸ்ட்ரோன் சுரப்பே இல்லாம, மாதவிலக்கு தள்ளிப் போகும். எதிர்பாராத நேரத்துல ரத்தப் போக்கு  அதிகமாகும். இவங்களுக்கு பிராஜெஸ்ட்ரோனுக்கான மருந்துகள் கொடுத்துதான் இதை சரியாக்கணும்.

அடுத்து தைராய்டு பிரச்னை இருக்கிற வங்களுக்கும், அதிக ரத்தப் போக்கு இருக்கும். அதை சரிபார்க்க வேண்டியது அவசியம். மூளைலேர்ந்து சுரக்கக்  கூடிய ‘புரோலேக்டின்’ ஹார்மோன் அதிகமானாலும், ரத்தப் போக்கு அதிகமாகும். சோதனையின் மூலம், காரணத்தைக் கண்டுபிடிச்சு, சிகிச்சை  எடுத்துக்கணும். கருத்தடை மாத்திரைகளுக்கு, இந்த ஈஸ்ட்ரோஜென், பிராஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களை சமன்படுத்தற குணமுண்டு.

கல்யாணமாகாத பெண்களுக்குக் கூட இந்த மாத்திரைகளை 3 முதல் 6 வாரங்களுக்குக் கொடுத்தா, ஹார்மோன் பிரச்னையை சரியாக்கி, ரத்தப்  போக்கு கட்டுப்படும். மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத பட்சத்துல மாதம் ஒரு ஊசி மூலமா மருந்து செலுத்த வேண்டியிருக்கும். கல்யாணமாகி, குழந்தை பெற்ற பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தா, ‘மெரீனா’ என்ற கருவியை கர்ப்பப் பைக்குள்ள  செலுத்தலாம். இது காப்பர் டி மாதிரியான சின்ன கருவி.

சரியான அளவுல ஹார்மோன் சுரக்க இது உதவி செய்யும். 5 வருஷங்களுக்குப் பிறகு அதை எடுத்துட்டு, தேவைப்பட்டா புதுசா பொருத்திக்கலாம்.  கல்யாணமாகாத மற்றும் குழந்தை பெறாத பெண்களுக்கு இது ஏற்றதில்லை. இது தவிர ‘பலூன் தெர்மல் அப்லேஷன்’னு ஒரு சிகிச்சையும் இருக்கு.  கர்ப்பப் பைக்குள்ள பலூன் மாதிரியான ஒன்றை வச்சு, வெந்நீரை செலுத்துவோம். கர்ப்பப் பையின் உள்புறமுள்ள லேயர்களை அது சுருக்கிடும். அதன்  விளைவா அதிகப்படியான ரத்தப் போக்கு கட்டுப்படும்.

அடுத்து ‘ஹிஸ்டெரஸ்கோபிக் என்டோமெட்ரியம்...’ இந்த சிகிச்சைல கர்ப்பப் பையின் உள்பக்கத்துல உள்ள அழுத்தமான, கெட்டியான ஜவ்வை,  பொசுக்கி, அகற்றுவோம். கர்ப்பப் பையை எடுக்காமலே இந்த சிகிச்சை சாத்தியம். மேல சொன்ன அத்தனை சிகிச்சைகளுக்குமே கேட்காதப்ப, கடைசி  கட்டமாதான் கர்ப்பப் பையை அகற்றுவதைப் பத்தி யோசிக்கணும்.

அதனால அளவுக்கதிக ரத்தப் போக்கு உள்ளவங்க, அதெல்லாம் அந்தந்த வயதில் அப்படித்தான் இருக்கும் என்கிற அலட்சியத்துல,  பரிசோதனையையோ, சிகிச்சையையோ தவிர்க்க வேண்டாம். அதன் பின்னணில உள்ள காரணம் தெரிஞ்சு, சரியான சிகிச்சையை எடுத்துக்கிட்டா, அந்த  3 நாட்கள், அவதியில்லாமக் கழியும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

No comments:

Post a Comment