Pages

Wednesday, January 29, 2014

திடீர் மயக்கங்கள் வருவது ஏன்? செய்ய வேண்டிய முதலுதவி என்ன?



பாத்ரூம் போனபோது மயங்கிவிட்டேன்.
படுக்கையிலிருந்து எழுந்தபோது மயங்கிவிட்டேன்.
யாரோ கூப்பிட்டபோது திரும்பிப் பார்க்கையில் விழுந்துவிட்டேன்.
சாமிக்கு வைப்பதற்காக பூ கொய்வதற்கு சென்றபோது என்ன நடந்ததெனத் தெரியாது விழுந்துவிட்டேன். இப்படிப் பலவாறாகச் கூறும் பலரைப் பார்திருக்கின்றோம்.

திடீர் மயக்கங்கள் யாருக்கு வருகின்றன?

பொதுவாக வயதானவர்களிடையே இவ்வாறு மயக்கம் வந்து விழும் சம்பவங்களை அதிகம் காண்கிறோம்.
சில தருணங்களில் பள்ளி மாணவர்களும் கூட அவ்வாறு விழுகிறார்கள்.

மூளைக்குச் செல்லும் இரத்தம் திடீரென குறையும்போதுதான் மயக்கம் ஏற்படுகிறது. இரத்தம் செல்வது குறைந்தால் மூளையின் கலங்களுக்கு ஒட்சிசன் கிடைப்பதும் குறையும்.
பல காரணங்களினால் இது ஏற்படலாம்.
மலத்தை கடுமையாக முக்கி வெளியேற்றும் போது

கடுமையான நீரிழப்பு நிலையின் போது இது நிகழலாம்.
உதாரணமாக
கடுமையான காய்ச்சல்,
கடுமையான வயிற்றோட்டம்,
சூழல் வரட்சியால் கடுமையாக வியர்வை வெளியேறல்
போன்றவற்றால் உடலிலுள்ள நீரின் தன்மை குறையும்போது ஏற்படலாம்.

அதிகமான இரத்தப் பெருக்கும் காரணமாகலாம்.
உதாரணமாக
காயத்தினால் கடுமையாக குருதிவெளியேறுவது
கடுமையான மாதவிடாய் பெருக்கு,
மூலத்திலிருந்து திடீரென இரத்தம் ஓடுதல்.

வெளிப்படையாகத் தெரியாது உடலின் உள்ளே நடக்கும் குருதிப்பெருக்குகள் காரணமாகவும் நடக்கலாம்.
உதாரணமாக-
குடற்புண்,

ஈரல் சிதைவு,
புற்றுநோய்கள் எனப் பல.

வேறு காரணங்கள்
கடுமையான இருமலும் காரணமாக இருப்பதுண்டு.

குக்கல் போன்ற இருமலின் போது இடையில் மூச்சு விடமுடியாது தொடர்ந்து இருமுவதால் ஏற்படலாம்.
திடீரென இரத்தத்தில் சீனியின் அளவு குறையும்போது. நீரிழிவு நோயாளரில் நீரிழிவு நோய்க்காக இன்சுலின் ஊசி, அல்லது மாத்திரைகள் எடுப்பவர்களிடையே ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உதாரணமாக

தினமும் எடுக்கும் மாத்திரை அல்லது ஊசியின் அளவை தவறுதலாக கூடுதலாக எடுத்தால் நடக்கலாம்.

விரதங்கள் இருப்பதால் நேரலாம். நீரிழிவு நோயாளிகள் விரதங்கள் இருப்பதும் உணவுகளைத் தவறவிடுவதும் கூடாது.
வேறு நோய்கள் காரணமாக பசியின்மையால், உட்கொள்ளும் உணவின் அளவு குறைவதாலும் ஏற்படலாம்.

நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாது நிற்பதாலும் நிகழலாம்.

பாடசாலைப் பிள்ளைகள் வழிபாடுக்காக,
இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்கும்போது விழுவது உதாரணங்களாகும்.
திடீரெனப் படுக்கையை விட்டு எழும்போது பலர் மயங்கி விழுவதுண்டு.
படுக்கையிலிருந்து திடீரென எழும்போது இரத்த அழுத்தம் தற்காலிகமாக குறைவதே இதற்குக் காரணமாகும்.

படுக்கை விட்டெழும்போது தலைச்சுற்றும் மயக்கமும்

சடுதியாக வரும் கடுமையான வலி சிலருக்கு திடீரென மயக்கத்தைக் கொடுப்பதுண்டு.
மிகுந்த பயமும் மயக்கத்தை அதே போல உண்டுபண்ணலாம்.
மது மற்றும் போதைப் பொருட்களும் காரணமாகலாம்.
சில மருந்துகளும் காரணமாகலாம்.
அறிகுறிகள்:
நாம் மயக்கம் அடைவதற்கு முன்பு சில அறிகுறிகளை நம்மால் உணர முடியும். இதன் மூலமாக சில முதலுதவிகளை தாங்களாகவே செய்து கொள்ளலாம். தலை கனமில்லாமல் லேசாக இருப்பது போன்ற உணர்வு, சோர்வு, வாந்தி வருவது போன்ற உணர்வு, தோல் வெளுத்துக் காணப்படுபவை இவை அனைத்தும் மயக்க நிலையை ஏற்படுத்தகூடிய அறிகுறிகள்.

முதலுதவி:

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது முன்புறமாக சாய வேண்டும், தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக் கொள்ள வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபரை சுயநினைவை இழக்கும் போது பாதிக்கப்பட்டவரின் தலை குனிந்தும், கால்களை உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.

இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும். குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment