Monday, March 31, 2014
நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?
நீங்கள் அத்தனை பேரும் சுத்தம்தானா?
ஆடைகளுக்கு நாம் எல்லோருமே பெரிய முக்கியத்துவம் கொடுப்பவர்கள்தான். உள்ளா ¬டகளுக்கு?
உள்ளாடைகளின் தூய்மைபற்றி நம்மிடம் பேசினார் சென்னை மருத்துவக் கல்லூரி மருந்தியல் துறைப் பேராசிரியர் ஈ. தண்டபாணி.
'உள்ளாடை அணிவது நாகரீகத்துக்காக மட்டும் அல்ல. அதுவும் ஒரு வகையில் நம் உடலுக்குப் பாதுகாப்பைத் தருகிறது.
ஆண்களைப் பொருத்தவரையில், பைக், சைக்கிள் போன்ற
வாகனங்களை ஓட்டும்போதும் பிற சமயங்களிலும் விதைப் பைகள் அடிபடாமல்
காக்கும். உள்ளாடைகள் சுத்தமாக இருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.
அழுக்கான உள்ளாடைகளும் காற்றோட்டத்தைத் தடை செய்யும் உள்ளாடைகளும் தோலில்
இருந்து வியர்வை வெளியேறும் துவாரங்களை அடைத்துவிடும். தோலில் இயற்கையிலேயே
இருக்கும் பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் இதுபோன்ற சூழ்நிலையில் பல்கிப்
பெருகி நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தும். இதன் தொடர்ச்சியாக சிறு கட்டிகள்,
கொப்புளங்கள், அரிப்பு ஆகியவை ஏற்படும்.
உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் உள்ளாடைகள் விஷயத்தில்
கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பருமனாக உள்ளவர்கள் உடலின் உள் உறுப்புகள்
கூடுதல் அழுத்தத்துடன் இருக்கும். மிக இறுக்கமாக உள்ளாடைகளை
அணிந்திருக்கும் அவர்கள் கனமான பொருட்களைத் தூக்கினாலோ, வேகமாக இருமினாலோ,
தும்மினாலோ குடல் இறக்கம் ஏற்பட சாத்தியம் உண்டு. மேலும் மிக அழுத்தமாக
உள்ளாடைகளை அணிவதால் விதைப் பைகளின் வெப்பம் அதிகமாகி விந்தணு உற்பத்தி
குறையவும் வாய்ப்பு இருக்கிறது. விதைப் பைகளின் அளவையும் இறுக்கமான
உள்ளாடைகள் சுருங்கச் செய்யக் கூடும்.
பெண்களைப் பொருத்தவரை உள்ளாடைத் தூய்மை மிக முக்கியம்.
காரணம்... ஆசனவாய், யோனி மற்றும் சிறுநீர்த் தாரை ஆகியன அருகருகே
இருப்பதால் ஓரிடத்தில் இருந்து கிருமிகள் அடுத்த பகுதிக்கு மிக எளிதில்
பரவி, பல பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடும். அழுக்கான உள்ளாடைகளை அணிவதால்
பெண்களுடைய பிறப்பு உறுப்பில் நோய்த் தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
பெண்கள் உள்பாவாடை அணியும்போது நாடா இறுக்கமாக இல்லாமல்
பார்த்துக்கொள்ள வேண்டும். நாடாவைத் தவிர்த்துவிட்டு லூப் மற்றும் பெல்ட்
உள்ள பாவாடைகளைக்கூட அணியலாம். ரிப்பன் போன்ற பட்டையான நாடாவைப்
பயன்படுத்தலாம். இதனால் இடுப்புத் தசையின் மீது அழுத்தம் குறையும். ஒவ்வொரு
முறையும் முடிச்சு இருக்கும்/இறுக்கும் இடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.
உள்பாவாடையை இடுப்பில் கட்டும் உயரத்தையும் தினசரி
மாற்ற வேண்டும். இப்படி ஒரே இடத்தில் அழுந்துவதால் நாளடைவில், அங்குள்ள
செல்கள் இறந்துவிடும். இறந்த செல்கள் என்றாலே கிருமிகளுக்குக்
கொண்டாட்டம்தான். எனவே, அவை அங்கு வேகமாக வளர்ந்து பல்வேறு தொல்லைகளை
ஏற்படுத்தும்.
இடுப்பின் முன்புறத்தையும் பின்புறத்தையும் கயிற்றால்
இணைக்கும் 'தாங்’ என்று சொல்லப்படும் உள்ளாடைகளை அணியும் போக்கு மேல்தட்டு
வர்க்கத்தில் பிரபலமாகிவருகிறது. இது ஆசனவாய்ப் பகுதியில் இருந்து யோனிக்கு
பாக்டீரியாக்கள் பரவி சிறுநீர்த் தாரையில் நோய்த் தொற்று ஏற்பட
வழிவகுக்கும். எனவே, இந்த வகை பேன்டீஸ்களை ஒதுக்குவது நல்லது.
தழும்புகளோ தோலில் நிறமாற்றமோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும்.
மேலும் வெகு நாட்களாக இப்படி அழுந்திக் காயம் ஏற்பட்டு
அது ஆறாமல் இருந்தால் ஒருகட்டத்தில் புற்றுநோய்கூட வர வாய்ப்பு
இருக்கிறது. சேலை மற்றும் உள்பாவாடையை இறுக்கிக் கட்டுவதால் புற்றுநோய்க்கு
ஆளான 3 பெண்களுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிகிச்சை அளித்ததாக மும்பை
கிரான்ட் மருத்துவக் கல்லூரியின் அறுவைச் சிகிச்சைப் பிரிவு பேராசிரியர்
ஜி.டி.பக்ஷி என்பவர் ஜர்னல் ஆஃப் இண்டியன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில்
தெரிவித்திருக்கிறார்' என்று சொல்லி முடித்தார் மருத்துவர் தண்டபாணி!
அழகியல் நிபுணரான ஹேமா லட்சுமணன் உள்ளாடைத் தூய்மைக்கு சில டிப்ஸ்களைச் சொன்னார்.
பலவிதமான பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும் துவைப்பதால் மட்டுமே போகாது; வெயிலில் உலர்த்துவதால் மட்டுமே போகும்.
தினந்தோறும் உள்ளாடைகளை மாற்றுவது மிகவும் முக்கியம். தேவைப்பட்டால் இரு தடவைகள்கூட மாற்றலாம்.
கடையில் இருந்து வாங்கி வரும் புது உள்ளாடைகளை அப்படியே அணிவதைவிட ஒரு முறை நன்கு துவைத்த பிறகு அணிவது நல்லது.
உள்ளாடையால் மறைக்கப்பட்ட இடங்களில் தினசரி தேங்காய் எண்ணெய் பூசி வந்தால் சருமம் மிருதுவாகும்.
என்னதான் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் ஒருவருடைய உள்ளாடையை இன்னொருவருவர் ஒரு போதும் உபயோகிக்கக் கூடாது.
பருத்தித்
துணியால் ஆன உள்ளாடைகள்தான் வியர்வையை முற்றிலுமாக உறிஞ்சக் கூடியவை
என்பதால் அவற்றையே அணிவது நல்லது. அப்போதுதான் வியர்வையினை அந்தத் துணி
உறிஞ்சி எடுத்து வியர்வையினால் வரக்கூடிய தொற்று நோயைத் தடுக்கும். இரவில்
மிகவும் தளர்வான உள்ளாடைகளை அணிவதே நல்லது.
சுத்தம் சுகம்தரும்
போஸ் என்கிற சந்திரபோஸ் ஆசை ஆசையாக
நெருங்கினால்கூட அகல் என்கிற அகல்யா தள்ளியே நின்றாள். இந்தத் தம்பதிக்குள்
என்ன பிரச்னை? பிடித்தமானவர்களைக்கூட பிடிக்காமல் செய்யும், மூக்கைப்
பிடிக்க வைக்கும் விஷயம்தான் காரணம். இத்தனைக்கும் இவர்கள் 'நீ ஆடை அணிகலன்
சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்’ என்கிற பாடலை அடிக்கடி முணுமுணுத்த
முன்னாள் காதலர்கள். போஸிடம் இருந்த புகைப் பழக்கமும் சுத்தமற்ற
உள்ளாடைகளும்தான் அகல்யாவை போஸிடம் இருந்து சில சென்டி மீட்டர் தூரத்தில்
நிற்கவைத்தன. இதில் வேடிக்கை என்னவென்றால், யார் மீது துர்வாடை அடிக்கிறதோ
அவர்களுக்கு அது தெரிவதே இல்லை என்பதுதான். சுத்தம்தான் நல்ல
ஆரோக்கியத்துக்கான ஆரம்பப் புள்ளி.
சிலர், வெளியில் பார்ப்பதற்கு அழகான ஆசாமியாக
இருப்பார்கள். அவர்கள் வரும்போது அந்த இடமே கமகமக்கும். ஆனால், வீட்டுக்கு
உள்ளே அழுக்காகத் திரிவார்கள். இன்றைய போக்குவரத்து நெரிசல்மிக்க, புழுதி
பறக்கும் சூழலில் நாம் ஒவ்வொருவரும் கூடுதல் கவனத்துடன் உடல் சுத்தத்தைப்
பேண வேண்டும். உடல் சுத்தம் என்பது வெளிப்படையான உறுப்புகளைச் சுத்தமாக
வைத்திருப்பது மட்டும் அல்ல; ஜனன உறுப்புகளையும் சேர்த்துதான்.
பெண்ணின்
பிறப்பு உறுப்பில் சில திரவங்கள் இயல்பாக சுரந்துகொண்டே இருக்கும்.
இவற்றில் இருந்து துர்வாடை வருவதுடன் கிருமித் தொற்று ஏற்படவும் வாய்ப்பு
உண்டு. பெண்கள் குளிக்கும்போது ஜனன உறுப்புகளைச் சுத்தப்படுத்துவதையும்
சிறுநீர் கழித்த உடனே பிறப்பு உறுப்பைத் தண்ணீர் கொண்டு சுத்தம்
செய்வதையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படி ஜனன உறுப்பைச் சுத்தப்படுத்த
அவரவர் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் சோப்பும் சாதாரண தண்ணீருமே
போதுமானது. குறிப்பாக பெண்கள் மலம் கழித்த பின்னர் ஆசன வாயை முன்பக்கம்
கையால் மேலிருந்து கீழாகத்தான் கழுவ வேண்டும். மாறாக, கீழிருந்து மேலாகவும்
மேலிருந்து கீழாகவும் கழுவுவதால் சிறுநீர்த் தொற்று ஏற்படலாம்.
ஆண் உறுப்பின் முன் தோலில் மெழுகு போன்ற திரவம்
திரளும். இதனை சுத்தப்படுத்தாவிட்டால் துர்வாடை அடிக்கும். அங்கே கிருமித்
தொற்று வளரவும் வாய்ப்பு உண்டு. எனவே, ஒவ்வோர் ஆணும் குளிக்கும்போது ஆண்
உறுப்பின் முன்தோலையும் தலைப் பகுதியையும் நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்ய
வேண்டும்.
இருமுறை பல் துலக்குவது பலரிடம் இல்லாத ஒன்று. அதனையும்
பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் குடிக்கிற தண்ணீரில் வாய்
கொப்பளிக்க வேண்டும். பல பேர் உள்ளாடைகளில் கவனம் செலுத்துவதே இல்லை.
'உள்ளே போட்டுக்கொள்வதுதானே வெளியிலா தெரியப்போகிறது’ என்கிற எண்ணம்தான்
இதற்குக் காரணம். தினமும் சுத்தமான, பருத்தித் துணியால் ஆன உள்ளாடைகளை
அணிவதே நல்லது.
சிகரெட் புகைப்பவர்களுக்கு வாய் நாற்றம் ஏற்படுவதோடு
ஈறுகளும் பல்லின் எனாமலும்கூட கெட்டுப்போய்விடும். தம்பதி இருவருமே
படுக்கைக்குப் போகும் முன் மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மூச்சுக் குழாய்
தொற்று, கல்லீரல் பிரச்னை, சர்க்கரை நோய், மலச் சிக்கல், சைனஸ் தொற்று,
மூக்கில் கட்டி, சொத்தைப் பல் போன்ற காரணங்களாலும் வாயில் துர்நாற்றம்
(Halitosis) ஏற்படும். இதுதவிர பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகமாக
உண்பவர்களுக்கும் வாய் துர்நாற்றம் ஏற்படும்.
பொதுவாக வியர்வையில் எந்தவிதக் கெட்ட வாடையும் அடிப்பது
இல்லை. ஆனால், வியர்வையுடன் பாக்டீரியா கிருமி சேர்ந்தாலோ அல்லது வேலையின்
தன்மை, தட்பவெப்பம், மனக்கவலை, உடல் பருமன், தைராய்டு பிரச்னை, சிலவகை
மருந்துகள் போன்ற காரணங்களைச் சார்ந்து வியர்வை நாற்றம் அடிக்கலாம். இரண்டு
வேளை குளித்தால் வியர்வை நாற்றம் குறையும். குளித்து முடித்ததும் ஈரத்தை
நன்கு உறிஞ்சுவதற்கு பருத்தித் துணியினைப் பயன்படுத்த வேண்டும். வியர்வை
அதிகம் சுரக்கும் இடங்களில் நறுமணப் பவுடரைப் பயன்படுத்தலாம். மேலும்,
இறுக்கமான உடைகளைத் தவிர்த்து பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. காலில் அணிகிற
சாக்ஸ்களை துவைத்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கால்களுக்குப்
பவுடர் பூசிய பின்னர் சாக்ஸ் அணிவது நல்லது. பாதங்களையும் சுத்தமாகப்
பராமரித்து வரவேண்டும்.
உடல் உறவுக்குப்பின் பிறப்பு உறுப்புகளை சுத்தப்படுத்திக் கொண்டால் எந்தப் பிரச்னையும் வராது!
மறதியை மறக்க 7 வழிகள்
ஒரு பாடலின் சரணம் நன்றாக நினைவில்
இருக்கும். ஆனால், பாடலின் பல்லவி மட்டும் நினைவுக்கு வராது. படத்தின்
பெயர், பாடலைப் பாடியவர், இசை அமைத்தவர் என பாடல்குறித்த அனைத்துத்
தகவல்களும் நினைவில் இருக்கும்; பாடலின் முதல் வரியைத் தவிர.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால்,
பாடலின் முதல் வரி நமக்குத் தெரியும்; ஆனாலும் நமக்குத் தேவைப்படும்போது
வெளிப்படுவது இல்லை. நாம் எல்லோருமே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இதுபோன்று
அனுபவப்பட்டிருப்போம். நினைவாற்றல் என்றால் என்ன, அது எப்படி வருகிறது? அதை
அதிகரிப்பதற்கான வழிகள் என்ன என்பதுபற்றி மனநல மருத்துவர்
செந்தில்வேலனிடம் கேட்டோம்.
நினைவாற்றல் என்றால் என்ன?
நம்முடைய மூளையைக் கணினியுடன் ஒப்பிடலாம். கணினியில்
தகவலைப் பதிவுசெய்கிறோம். அதேபோல், மூளைக்குத் தகவலைக் கொண்டுசெல்கிறோம்.
இதை 'என்கோடிங்’ என்போம். பின்னர் தகவலானது மூளையில் பதிவுசெய்யப்படுகிறது.
இதை 'ஸ்டோரேஜ்’ என்போம். தேவையானபோது கணினியில் உள்ள தகவலை எடுக்கிறோம்.
அதேபோல், மூளையும் தேவைப்படும்போது சேமித்த தகவலை எடுக்கிறது. இதை
'ரெட்ரிவல்’ என்போம். தகவலைக் கொண்டுசேர்ப்பது, சேமிப்பது, தேவைப்படும்போது
எடுப்பது ஆகிய மூன்றும் சேர்ந்ததுதான் நினைவாற்றல். இந்த மூன்றில் ஏதாவது
ஒன்று சரியாகச் செய்யப்படவில்லை என்றாலும் நினைவாற்றல் பாதிக்கப்படும்.
எப்படி வேலை செய்கிறது?
என்கோட்: காட்சி,
சமிக்ஞை, மொழி எனப் பல வழிகளில் தகவல் மூளைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும்போது அனைத்தும் மூளைக்குக்
கொண்டுசெல்லப்படும்.
ஸ்டோரேஜ்: மூளைக்குக் கொண்டுசெல்லப்பட்ட தகவல் குறுகிய
நினைவாற்றல், மிகக் குறுகிய நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல் என்று
மூன்று விதங்களில் சேமிக்கப்படுகிறது. குறுகிய நினைவாற்றல் என்பது
உடனுக்குடன் மறந்துவிடுவது. சாலையில் விளம்பரங்களைப் படித்துக்கொண்டே
செல்கிறோம். அடுத்த சில நிமிடங்களில், என்ன படித்தோம் என்பதை
மறந்துவிடுவோம். இது மிகக் குறுகிய நினைவாற்றல். ஒரு சில விளம்பரங்கள்
மட்டும் நம்மைக் கவரும். அதைப் பற்றி சிந்தித்துக்கொண்டே செல்வோம். அந்த
விளம்பரம் சில மணித் துளிகள் முதல் சில நாட்கள் வரை நம் நினைவில்
இருக்கும். இதைக் குறுகிய நினைவாற்றல் என்கிறோம். நம்முடைய பெயர், அப்பா
பெயர், வீட்டு முகவரி, செல்போன் எண் போன்றவற்றைத் திரும்பத் திரும்பப்
பயன்படுத்துகிறோம். அதனால் அது பல காலத்துக்கு நினைவில் இருக்கும். இது
நீண்ட கால நினைவாற்றல்.
ரெட்ரிவல்: நம்முடைய
பெயர் போன்ற விஷயங்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடும். ஆனால், நீங்கள்
இரண்டாம் வகுப்பு படித்தபோது உங்கள் ஆசிரியர் யார் என்று கேட்டால் கொஞ்சம்
யோசிப்போம். அது நம் மூளையின் உள்ளே இருக்கிறது. கூகுள் சர்ச் இன்ஜின்
தேடுவதுபோல் கொஞ்சம் தேட வேண்டும். படித்த பள்ளிக்கூடம், நண்பன், முக்கியச்
சம்பவம் என எல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து கடைசியில் ஆசிரியர்
பற்றிய நினைவு வரும். நினைவாற்றல் பெருகக் கவனம் செலுத்துதல் முக்கியம்.
கவனச் சிதறல் உருவாக்கும் விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
மூளையில் பதிந்ததை திரும்பத் திரும்ப ரிகர்சல் செய்ய வேண்டும்'' என்று
அழுத்தம் கொடுத்த டாக்டர் செந்தில்வேலன் நினைவாற்றலைப் பெருக்குவதற்கான
விஷயங்களையும் பட்டியலிட்டார்.
மறதி நல்லது!
மனித
மூளைக்குத் தினமும் லட்சக்கணக்கான தகவல்கள் சென்றுகொண்டே இருக்கின்றன.
இதில் தேவையானதை நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை மறந்துவிடுகிறது
மூளை. அப்படி மறக்கவில்லை என்றால் மனிதனுக்கு மனநலம் பாதித்துவிடும்.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான தகவல்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்தான்
பிரச்னை. அப்போதுதான் அது மறதிநோய் (டிமென்ஷியா) ஆகிறது. இந்த நோயில்,
தகவலானது உள்ளே போகிறது. ஆனால், அந்தத் தகவலை சேமித்துத் திரும்ப
எடுப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. சரியாகச் சேமிக்கப்படவில்லை என்பதால்
திரும்ப நினைவுகூர முடிவது இல்லை. மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு,
ரத்தத்தில் இருந்து நீர் பிரிந்து மூளையில் கோத்துக்கொள்வது, தலையில்
அடிபடுவது, வயது அதிகரிப்பு, அல்சைமர்ஸ் எனப்படும் மூளை தேய்மானம் போன்ற
பல்வேறு காரணங்களாலும் நினைவாற்றலில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதவிர மூளை
வளர்ச்சி குறைந்தவர்களுக்கு நினைவாற்றல் இருக்காது. மன அழுத்தம், மனப்
பதற்றம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்குத் தகவல் மூளைக்குள்ளேயே செல்லாது.
இதனால் இவர்களுக்கும் நினைவாற்றல் குறைவாகவே இருக்கும்.
வேப்பிலைக்கு நிகரான கறிவேப்பிலை!
வேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன்
காப்புரிமை கோரிய பிறகுதான், 'ஐயோடா.... இது எங்க பாட்டன் சொத்து....’
என்று விழித்தெழுந்து உலக நீதிமன்றப் படிகள் ஏறி இறங்கி, உரிமையை
மீட்டுவந்தோம். வேம்பின் அருமையை மறந்துபோனதன் விளைவுதான் இது. இதே நிலைமை
வெகு விரைவில் கறிவேப்பிலைக்கும் வரலாம்!
காய்கறிக் கடைகளில் கொசுறாகக் கிடைத்தாலும் மகத்தான
மருத்துவக் குணங்களைக்கொண்டது கறிவேப்பிலை. முடி கொட்டுவதைத் தவிர்க்க,
செரியாமையைப் போக்க, அமீபியாசிஸ் (Amebiasis) எனப்படும் ஒரு வகை
வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த, வயோதிகத்தில் வரும் 'அல்சைமர்’ (Alzheimer)
எனும் ஞாபக மறதியைக் குறைக்க எனப் பல பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும்
கறிவேப்பிலையை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கொண்டாடுகின்றனர். 1950-ல்
அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'கறிவேப்பிலை
ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும், ரத்தக் கொழுப்பை 30 சதவிகிதமும்
குறைக்கிறது’ என்ற உண்மை தெரியவந்தது. இதுதவிர,
'இந்திய சமையலில் வாசனைக்குச் சேர்க்கப்படும் கறிவேப்பிலை, பெருங்குடல்
புற்றுநோயைத் தடுக்கும் தன்மை உடையது’ என்பதை ஆஸ்திரேலிய உணவியல்
ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்து உள்ளனர்.
சமையலில் சேர்க்க வேண்டியது, சாப்பிடும்போது
எடுத்தெறிந்துவிடுவது என்கிற ரீதியில் அலட்சியமாக நாம் பயன்படுத்தும்
கறிவேப்பிலைக்கு என்னென்ன மருத்துவக் குணங்கள் உள்ளன எனப் பட்டியல்
இடுகிறார் சித்த மருத்துவர் கணபதி.
இளநரை மறையும்:
கிராமப்புறங்களில் சிறு வயதிலேயே இளநரை ஏற்பட்டால்,
கறிவேப்பிலையோடு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து சாப்பிடக்
கொடுப்பார்கள். பித்தம் கூடினாலோ, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு
குறைந்தாலோ, இளநரை உருவாகும். முடியின் கறுமை நிறத்துக்குத் தேவை இரும்புச்
சத்து. கறிவேப்பிலையில் இரும்புச் சத்து அதிகம். சின்ன வெங்காயம்
ரத்தத்தைச் சுத்திகரித்து, பித்தத்தைக் குறைக்கும். இதனால் இளநரை குறைந்து
முடிகள் கறுப்பாகும். முடி வளர்ச்சிக்குப் புரதமும் இரும்புச் சத்தும்
தேவை. 50 கிராம் உளுந்துடன், 25 கிராம் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்து
சாப்பிட்டு வர நல்ல முடி வளர்ச்சி கிடைக்கும்.
சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்:
10 வருடங்களுக்கும் மேலாக சர்க்கரை வியாதியால்
அவதிப்படும் நோயாளிகளுக்கு டயபட்டிக் நியூரோபதி வலி (Diabetic Neuropathic
Pain)உண்டாகும். அதாவது, ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி மாறுவதால், புற
நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகி ஏற்படும் வலி இது. கறிவேப்பிலையில்
நிறைந்துள்ள 'கார்பஸோல் ஆல்கலாய்டு’(Carbazole alkaloids)என்கிற வேதிப்
பொருளுக்கு இந்த பாதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி உண்டு.
'ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்
வைத்திருப்பதில் கறிவேப்பிலையின் பங்கு அதிகம்’ என்பதை ஆய்வாளர்கள்
நிரூபித்து உள்ளனர். இதனை 'கிளைக்கோசிலேட்டட் ஹீமோகுளோபின்’(Glycosylated
Hemoglobin & HbA1c)பரி சோதனை மூலம் அறியலாம். இது தவிர, உடலுக்கு
நன்மை பயக்கும் கொழுப்பு வகையான ஹெச்.டி.எல். (High Density Lipo Protein)
அளவையும் கறிவேப்பிலை உயர்த்துகிறது. கறிவேப்பிலை இலையை நிழலில்
காயவைத்துப் பொடியாக்கி தினசரி காலை, மாலை 10 கிராம் வீதம் நீரில் கலந்து பருகி வர சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
ரத்தசோகையை மட்டுப்படுத்தும்:
இரும்புச் சத்தும் பீட்டா கரோட்டினும் அதிகம் உள்ள
கறிவேப்பிலை ரத்த சோகையை குணப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும்
ஊக்குவிக்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பினால்
இரும்புச் சத்து குறையும். இதைச் சரிக்கட்டக் கறிவேப்பிலையைவிடச் சிறந்த
மருந்து கிடையாது.
குழந்தைப்பேறு கிட்டும்:
கறிவேப்பிலையில் உள்ள கார்பஸோல் ஆல்கலாய்டுகள்
கருமுட்டை உற்பத்தியைத் தூண்டுகின்றன. 20 கிராம் கறிவேப்பிலையுடன் மூன்று
கிராம் சீரகம், ஒரு கிராம் வெந்தயம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். காலையில்
வெறும் வயிற்றில் மோர் அல்லது பாலில் இந்தக் கலவையைக் கலந்து
குடித்துவந்தால், பித்தச் சூடு மற்றும் கருப்பைச் சூடு நிவர்த்தி ஆகும்.
கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?
கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic)
சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும்.
கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும்.
இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல்
போய்விடும்.
'கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து
தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா
பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும்
கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும்
நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals)
உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க
விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து,
பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம்.
இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!
ஃப்ரிட்ஜ் - கூல்! கூல்!
அத்தியாவசிய வீட்டுச் சாதனங்களில்
ஒன்றாகிவிட்டது ஃப்ரிட்ஜ். சரி, ஃப்ரிட்ஜை முறையாக, முழுமையாக எப்படிப்
பயன்படுத்துவது என்று தெரிந்துகொள்ளலாமா?
'நம் ஊரின் அறை வெப்ப நிலை 70 டிகிரி ஃபாரன்ஹீட்.
ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் ஃப்ரீஸரின் வெப்ப நிலை ஜீரோ டிகிரி பாரன்ஹீட்.
ஃப்ரீஸர் தவிர்த்த மற்றப் பகுதிகளை ரெஃப்ரிஜிரேட்டர் என்கிறோம். இதன் வெப்ப
நிலை 37 - 40 டிகிரி ஃபாரன்ஹீட்'' என்று தொடங்கினார் ஊட்டச்சத்து நிபுணர்
திவ்யா முத்துக்குமார்.
''ஃப்ரீஸரில் ஐஸ் க்ரீம், ஐஸ் கட்டி, அசைவ உணவுகள்
போன்றவற்றை வைக்கலாம். ஃப்ரீஸருக்குக் கீழே உள்ள பகுதி 'சில்லர்’
எனப்படும். இதில் பால் பாக்கெட், தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை வைக்கலாம்.
அடுத்து உள்ள பகுதிகளில் மாவு, பூ எனப் பாதுகாக்க வேண்டிய எந்தப்
பொருட்களையும் வைக்கலாம். காய்கறி மற்றும் பழங்கள் வைப்பதற்காகத் தனிப்
பெட்டி இருக்கும். அதில் மட்டுமே காய்கறி, பழங்களை வைக்க வேண்டும். கதவுப்
பகுதியில் தண்ணீர் பாட்டில், ஜூஸ் பாட்டில், மருந்துப் பொருட்கள்,
சாக்லேட், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றை வைக்கலாம்.
பொதுவாக
ஃப்ரிட்ஜுக்குள் பொருட்களை வைக்கும்போது அது எந்தப் பொருளாக இருந்தாலும்
தனித் தனி பாலிதீன் அல்லது துணிப் பைக்குள் வைத்துத்தான் வைக்க வேண்டும்.
ஆனால், அந்தப் பைகளில் சிறிய சிறிய துளைகள் இருக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் ஈரப்பதம் சரியாகப் பராமரிக்கப்படும்.
மாவு, துவையல் மற்றும் பூ, இஞ்சி, பூண்டு விழுது போன்ற
வாசனைப் பொருட்களைக் காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்துவைக்கலாம். இப்படி
வைக்கும்போதுதான் ஒரு பொருளில் உள்ள வாசனை அடுத்த பொருளுக்குப் பரவாது.
மேலும், சில பொருட்களுக்கு வாயுவை உண்டாக்கக்கூடிய தன்மை இயல்பாக
இருக்கும். அப்படி உருவாகும்போது, அது மற்ற பொருட்களையும் பாதிக்கும்.
உதாரணமாக, ஆப்பிளுக்கு ஈதரை உருவாக்கக் கூடிய தன்மை உண்டு. மற்ற பழங்கள்
மற்றும் காய்கறிகளோடு ஆப்பிளையும் சேர்த்துவைக்கும்போது எல்லாமே
கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. கேக் வகைகளுக்குப் பிற பொருட்களின் மணத்தை
எளிதில் ஈர்த்துக்கொள்ளும் தன்மை இருப்பதால், அலுமினியம் ஃபாயில் பேப்பரால்
நன்றாகச் சுற்றிவைக்க வேண்டும்'' என்றவர், எந்தப் பொருட்களை எத்தனை
நாட்களுக்கு வைத்துக்கொள்ளலாம் என்பதையும் விரிவாகச் சொன்னார்.
'பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களைப் பொருத்தவரை,
பிரிக்காமல் இருக்கும்பட்சத்தில் அதில் அச்சிடப்பட்டு உள்ள தேதி வரையிலும்
வைத்துப் பயன்படுத்தலாம். பிரித்துவிட்டால், சில நாட்களுக்குள் முழுவதையும்
பயன்படுத்திவிட வேண்டும். இல்லை என்றால், ஒவ்வொரு முறையும் நீங்கள்
ஸ்பூனைப் பயன்படுத்தி எடுக்கும்போது, அதன் வழியாகக் கிருமிகள் பரவுவதற்கு
வாய்ப்பு உண்டு.
பிஸ்கட், பிரெட் போன்றவற்றை அறை வெப்ப நிலையிலேயே
வைத்திருக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அதன் வெப்ப நிலை குறைந்து வறண்ட
நிலைக்கு மாறிவிடும். காய்கறி, பழங்களைப் பொருத்தவரை மொத்தமாக
வாங்கிவைத்துப் பயன்படுத்தும்போது, முதலில் நீர்ச் சத்து அதிகம்
உள்ளவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்துவதால்,
சத்துக்களின் அளவில் மாற்றமோ அல்லது வேறு பிரச்னைகளோ கிடையாது. குறிப்பிட்ட
தேதியையும் தாண்டிப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஃப்ரிட்ஜை
அசுத்தமாகவைத்திருப்பது, அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது மற்றும்
வெப்ப நிலை மாறுவது போன்ற சூழ்நிலைகளில்தான் ஃப்ரிட்ஜுக்குள்
வைக்கப்பட்டிருக்கும் பொருட்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஏற்கெனவே சமைத்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள்
வைத்திருந்துவிட்டு திரும்பவும் பயன்படுத்தினால், மறுபடியும் 140 டிகிரி
பாரன்ஹீட் வெப்ப நிலைக்கு சூடுபடுத்திய பிறகே சாப்பிட வேண்டும்.
அப்போதுதான் அதில் இருக்கும் பாக்டீரியா தொற்று அழியும். சமைத்த பொருட்களை
அடிக்கடி ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து சூடுபடுத்தி மறுபடியும்
ஃப்ரிட்ஜுக்குள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி வெப்ப நிலை
மாறுவதால் உணவின் தரமும் சுவையும் மாறுவதோடு தொற்றுகளும் ஏற்படலாம்'' என்று
எச்சரிக்கிறார் திவ்யா.
'ஃப்ரிட்ஜை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி?’ என்ற கேள்வியை மெக்கானிக் சரவணன் முன்வைத்தோம்.
'மாதத்துக்கு ஒரு முறை ஆறு மணி நேரம் ஃப்ரிட்ஜைப்
பயன்படுத்தக் கூடாது. ஃப்ரிட்ஜில் உள்ள எல்லாப் பொருட்களையும் வெளியில்
எடுத்துவிட்டு, சோப் தண்ணீரில் துணியை நனைத்து ஃப்ரிட்ஜை சுத்தமாகத்
துடைக்க வேண்டும். பின்னர் இரண்டு எலுமிச்சம் பழங்களை எட்டுத் துண்டுகளாக
வெட்டி, ஃப்ரிட்ஜுக்குள் வைக்க வேண்டும். இதனால் ஃப்ரிட்ஜுக்குள் உள்ள
கெட்ட வாசனை நீங்கும். சில சமயம் ஃப்ரிட்ஜினுள் வைத்த பொருள் ஏதேனும்
கெட்டுப்போக நேரிடலாம். அந்தச் சமயத்தில் கெட்டுப்போன பொருளை வெளியில்
எடுத்துவிட்டு எலுமிச்சையை வெட்டிவைத்தால் அழுகல் வாசம் போய்விடும்.
பொதுவாக ஃப்ரிட்ஜ் குளிர்ச்சியாக இருப்பதால் ஐந்து
நாட்களுக்கு ஒரு முறை 200 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்ந்துவிடும். இதை
ஆவியாக்கும் வசதி ஃப்ரிட்ஜிலேயே உள்ளது. அதற்கென உள்ள பொத்தானை அழுத்தினால்
அந்தத் தண்ணீர் இரண்டு மணி நேரத்தில் ஆவியாகிவிடும். ஐந்து நாட்களுக்கு
ஒரு முறை பட்டனை அழுத்தித் தண்ணீரை ஆவியாக்காமல்விட்டால், கொஞ்ச நாளிலேயே
ஃப்ரிட்ஜுக்குள் இருந்து தண்ணீர் வெளியே கசியும்.
கிரைண்டருக்கு அருகில் ஃப்ரிட்ஜை வைக்கக் கூடாது.
மாவில் உள்ள ஈரப் பதம் ஃப்ரிட்ஜில் தொடர்ந்து படும்போது விரைவிலேயே
துருப்பிடித்துவிடும். ஃப்ரிட்ஜுக்குக் குளிர்ச்சியைக் கொடுப்பதற்காக
அம்மோனியா, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்ற வாயுக்கள் முன்பு
பயன்படுத்தப்பட்டன. இவை ஓசோன் படலத்தில் துளையை ஏற்படுத்தக் கூடியவை
என்பதால், தற்போது ஃப்ரியான், ஆர்134ஏ போன்ற வாயுக்கள்
பயன்படுத்தப்படுகின்றன' என்கிறார் சரவணன்.
'தற்போது அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால்,
ஃப்ரிட்ஜின் வெப்ப நிலை ஒரே சீராக இருப்பது இல்லை. இதனால் அதற்குள்
இருக்கும் பொருட்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத்தொற்று ஏற்பட்டு,
வீணாகிவிடும். அந்தப் பொருட்களைச் சாப்பிடும்போது வாந்தி, வயிற்றுப்போக்கு,
நெஞ்சு எரிச்சல், செரியாமை போன்ற பிரச்னைகளும் உண்டாகும். சமயங்களில் உணவு
நஞ்சாகும் சாத்தியமும் உண்டு. எனவே இரண்டு நாட்களுக்கு மேல் உணவுப்
பொருட்களை ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்த வேண்டாம். முடிந்த வரை
ஃப்ரெஷ்ஷாகச் சாப்பிடுவதே நல்லது' என்கிறார் ராஜீவ் காந்தி அரசுப் பொது
மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளரும், பொது மருத்துவருமான கே.
சிவசுப்ரமணியன்.
உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜினுள் வைத்துப் பயன்படுத்தும் கால அளவுகள் இதோ:
புளி அதிகம் சேர்க்காத குழம்பு வகைகள், பொரியல் போன்ற சமைத்த பொருட்கள் -
ஒரு நாள்
புளிக் குழம்பு, காரக் குழம்பு -
இரண்டு நாட்கள்
உப்பு, காரம் சேர்த்த சமைக்காத அசைவ உணவுப் பொருட்கள் மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, துவையல் - ஒரு வாரம்
கேக் வகைகள் - மூன்று நாட்கள்
தயிர், மோர் - நான்கு நாட்கள்
(புளிக்காத தயிர் என்றால் ஒருநாள் மட்டும்)
சீஸ் - ஆறு மாதங்கள்
முட்டை, பழங்கள், காய்கறிகள் -
மூன்று வாரங்கள்
அடுக்கடுக்காய்ப் பலன் தரும் கடுக்காய்!
'தாயினும் சிறந்தது கடுக்காய்’ என்கிறது 'பதார்த்த குண
சிந்தாமணி’ நூல். 'அடுக்கடுக்காய் வந்த பிணி யாவும் கடுக்காய் கண்டு
காணாமல் போகும்’ என்கிறது கிராமத்துச் சொலவடை.
விளையும் இடம், நிறம், வடிவம், அதில் உள்ள டானின் என்ற
வேதிப் பொருளின் அளவு என இவற்றின் அடிப்படையில் கடுக்காய் மரத்தில் பல
வகைகள் இருக்கின்றன. இது இலை உதிர் வகை மரமாகும். இந்தியாவில் உள்ள மொத்தக்
கடுக்காய் மரங்களில் முக்கால் பங்கு மத்தியப் பிரதேசத்தில் இருக்கின்றன.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் பெரும் அளவு கடுக்காய்
மரங்கள் உள்ளன. இதன் இலை கால்நடைத் தீவனமாகவும், இதன் பிசின் கோந்தாகவும்
பயன்படுகிறது. மரப் பட்டையில் உள்ள டேனின், தோல் பதனிட உதவும் இயற்கைப்
பொருளாகும். பூக்கள் தேன் மிகுதியாகக்கொண்டவை. மரம், கட்டுமானப்
பணிகளுக்குப் பயன்படுகிறது.
இந்த மரத்தின் தாவரவியல் பெயர் 'டெர்மினேலியா செபுலா’ (Terminalia chebula). 60 முதல் 75 அடி உயரம் வரை வளரக்கூடியது.
''மருத்துவக் குணங்கள் ஏராளமாக இருப்பதால்,
'வைத்தியரின் காதலி’ (பிஷக் ப்ரியா) என்று கொண்டாடப்படுகிறது'' என்கிறார்
பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரி உதவி விரிவுரையாளர் ஜெயா
எபனேசர்.
கடுக்காய்க்
கொட்டையை நீக்கிவிட்டு மீதி உள்ள மேல் தோலை இடித்துச் சலித்து உண்ணலாம்.
கெட்டிப்படாமல் இருக்க, பசுநெய் சேர்த்துப் பிசைந்துவைக்க வேண்டும். இது
ரத்தத்தைத் தூய்மையாக்குகிறது, மலக் கட்டை நீக்கும். வயிற்றில் உள்ள
உறுப்புகளை வலுப்படுத்தும். மூளையையும் இதயத்தையும் பலப்படுத்தும்.
நினைவாற்றலைப் பெருக்கும்.
கடுக்காய்ப்
பொடியைத் தேனில் கலந்து ஓர் ஆண்டு முழுவதும் காலைதோறும்
சாப்பிட்டுவந்தால், வயோதிகத்தால் வந்த சுருக்கங்களும், முதுமைத்தன்மையும்,
நரையும் நீங்கும்.
கடுக்காயைத் துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு சுவைகளை அறியாமல் இருப்பது தீரும்.
கடுக்காய்ப் பொடியை மூக்கிலிட்டு உறிஞ்சினால், மூக்கில் ரத்தம் வடிவது நிற்கும்.
கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.
கடுக்காய்ப்
பொடியை இரண்டு கிராம் தண்ணீருடன் மாலையில் அருந்திவந்தால், மஞ்சள் காமாலை
நோய் நீங்கும். மேலும், ரத்தக் குறைவு, கை கால் எரிச்சல், தோலின் வெண்
புள்ளிகள் ஆகியனவும் குணமாகும்.
25
கிராம் கடுக்காய்ப் பொடியில் ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து 50
மி.லி-யாக வற்றவைத்துப் பருகினால், கண் நோய், சர்க்கரை நோய் கட்டுப்படும்.
இந்த நீரில் சில துளிகளைக் கண்ணில்விட்டாலும் கண் நோய் குணமாகும்.
கடுக்காய்ப்
பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து இரண்டு கிராம்
அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் புண் குணமாகும்.
கடுக்காயும் காசுக் கட்டியும் சம அளவு எடுத்து அரைத்து, நாக்குப் புண்ணுக்கு தடவினால் குணம் கிடைக்கும்.
பச்சைக்
கடுக்காயைப் பாலில் அரைத்துச் சாப்பிட்டால், இருமல், இரைப்பு, ரத்தமும்
சீழுமாய் போகும் வயிற்றுக்கடுப்பு, வறட்டு இருமல் ஆகியன குணமாகும்.
கடுக்காய்த்
தூளையும் பசு நெய்யையும் சம எடை எடுத்து ஒரு பீங்கான் ஜாடியில் போட்டு ஒரு
மெல்லிய துணியால் மூடி 40 நாள் வெயிலில் வைத்து வடிகட்டி 5 முதல் 10
மி.லி. அளவு காலை - மாலை உண்டுவந்தால், மலச் சிக்கல், வயிற்றுப் புண், மூல
முளை, பவுத்திரம் போன்ற நோய்கள் தீரும்.
கடுக்காயைத்
தட்டித் துணியில் முடிந்து ஆமணக்கு எண்ணெயில் விட்டுச் சூரிய
ஒளியில்வைத்து பின் அதைக் கண்களில் பிழிந்தால், மேக நோயில் வரும் கண் நோய்,
கண் பீளை வடிதல், கண் சிவப்பு நீங்கும். கடுக்காயை நீரில் ஊறவைத்து
வடிகட்டிய நீரை வெயிலில் குழம்பாகும் வரை வைத்து 5 முதல் 10 மி.லி. கிராம்
அளவு ஒரு நாள்விட்டு ஒரு நாள் உண்டால், இரைப்பை பலப்படுவதோடு நாட்பட்ட மலச்
சிக்கலும் தீரும்.
கடுக்காய்ப் பிஞ்சு: ஆமணக்கு
எண்ணெயுடன் கடுக்காய்ப் பிஞ்சைச் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை
உள்ளுக்கும் வெளியிலும் பயன்படுத்தினால், மலச் சிக்கல், மூலக்கடுப்பு,
ஆசனவாய் வெடிப்பு முதலியவை தீரும்.
கடுக்காய்ப் பூ: இதனைப் பொடி செய்து
இரண்டு கிராம் நீருடன் அருந்த, கடுப்போடு கூடிய பேதி தீரும். பூவை
அத்திமரப் பட்டையுடன் சேர்த்துப் பால்விட்டு அரைத்து இரு வேளை உண்டால்,
ரத்தமும் சளியும் கலந்த வயிற்றுப்போக்கு மற்றும் பெண்களின் வெள்ளைப்படுதல்
பிரச்னை தீரும்.
கடுக்காய் மரத்தின் வேர்: எலும்பைப் பற்றிய நோய்கள் தீரும்.
கடுக்காய் மரக்கட்டை: தசையைப் பற்றிய நோய்கள் தீரும்.
கடுக்காய் மரப்பட்டை: தோல் நோய்களைப் போக்கும்.
முத்தமா அசுத்தமா....
அதரங்கள் பேசும் அன்பு மொழி முத்தம்.
ஃபிரெஞ்சுக்காரர்களை கேட்டால்... 'முழுமையான இன்பத்தை நுகரும் வகையில்
இந்தியத் தம்பதியினருக்கு சரியாக முத்தம்கூடக் கொடுக்கத் தெரியாது’ என்று
கேலி செய்வார்கள். அதையெல்லாம், 'குட் நைட்’ பகுதியில் டாக்டர் நாராயண
ரெட்டி பார்த்துக் கொள்வார். ஆனால் முத்தத்தை எப்படி சுத்தமாக கொடுக்க
வேண்டும்? பாதுகாப்பான முத்தங்கள் பற்றியும் பாதுகாப்பற்ற முத்தங்களினால்
பரவும் நோய்கள்பற்றியும் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின்
மருத்துவத் துறைப் பேராசிரியர் சுந்தரமூர்த்தி விளக்கமாகப் பேசினார்.
'முத்தத்தினால் பல நன்மைகள் இருக்கின்றன. தங்களது
அன்பின் ஆழத்தை இது தெரிவிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. சிற்றின்ப
நுகர்வுக்கான ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆழமாக, நிதானமாக அளிக்கப்படும்
முத்தம் ஒன்றின் மூலம் 60 கலோரி வரை சக்தி எரிக்கப்படுகிறது. முத்தம்
முகச்சுளிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக வாயைச் சுத்தமாக
வைத்திருக்கும் எண்ணம் ஏற்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தி
(Immunity) ஓரளவு அதிகரிக்கிறது'' என பாஸிடிவ் பாயின்ட்களை அடுக்கிய
டாக்டர் இந்த விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டிய ஏரியாக்களைப் பற்றியும்
விளக்கினார்.
''நெற்றி, உச்சந்தலை, கைகள் போன்றவற்றில்
கொடுக்கப்படும் முத்தங்களினால் நோய்த்தொற்றுகள் அதிகமாகப் பரவுவது இல்லை.
இவை மேலோட்டமான முத்தங்கள். ஆனால், உதட்டின் மீது உதட்டைப் பொருத்தி,
உமிழ்நீர்கள் பரிமாற்றம் ஆகின்ற முத்தங்களின்போது கண்டிப்பாக எச்சரிக்கை
தேவை.
கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர உமிழ்நீர்ப்
பரிவர்த்தனையோடு நடக்கும் தாம்பத்தியத்தைத் தாண்டி வேறு ஒருவருக்கு
'ஃபிரெஞ்ச் முத்தம்’ கொடுக்க எவருக்கேனும் சபலம் ஏற்பட்டால்
அப்படிப்பட்டவர்கள் நிச்சயமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது.
ஒருவரின் உமிழ்நீரில் நோய்களைப் பரப்பும் நுண் உயிரிகள்
ஏராளமாக இருக்கின்றன. அவை ஒருவரிடம் இருந்து அடுத்தவருக்கு போனால், சளி,
ஃப்ளூ போன்றவை தொற்றிக்கொள்ளக்கூடும். மோனோ நியூக்ளியோஸிஸ் என்னும் நோய்
உமிழ்நீரில் இருக்கும் 'ஏப்ஸ்டெயின்பார்’ வைரஸ் மற்றும் 'சைடோமெகாலோ’
வைரஸ்களால் பரவுகிறது. இந்த நோய் ஏற்பட்டால் தொண்டையில் வெண் படலம்
தோன்றும். தசைகளில் வலி இருக்கும். பசியின்மை தோன்றும். உடலில்
கொப்பளங்களும் வரலாம். கன்னங்களின் உட்புறச் சுவர்கள், நாக்கு, வாயின் மேல்
அண்ணம் மற்றும் பற்கள் ஆகிய பகுதிகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
'ஸ்ட்ரெப்டோகோகஸ்’ என்னும் பாக்டீரியா ஈறு நோய்கள், தொண்டைப் பிடிப்பு
உள்பட பல்வேறு நோய்களுக்குக் காரணம் ஆகிறது.
மூக்கு, வாய், தொண்டை மற்றும் சுவாசப் பாதை ஆகிய
அனைத்துமே தொடர்ச்சியாகவும் ஒரே விதமான திசுக்களாலும் ஆனவை. எனவே,
உமிழ்நீரில் இருக்கும் கிருமிகள் முத்தத்தின்போது பரிமாறப்பட்டு ஓரிடத்தில்
ஏற்படும் தொற்று எளிதாக மற்ற இடங்களுக்கும் பரவிவிடும்.
கல்லீரலைப் பாதிக்கும் ஹெபடைடிஸ் வைரஸ் உமிழ்நீரில்
இருக்கிறது. முத்தமிடுவதன் மூலம் நிச்சயம் இது அடுத்தவருக்குத் தொற்ற
வாய்ப்பு இருக்கிறது. ஹெச்ஐவியைப் பொருத்தவரை முத்தமிட்டுக்கொள்கிறவர்களின்
வாயில் புண்களோ ரத்தக் கசிவோ இருந்தால் பரவ வாய்ப்பு இருக்கிறது.
வைட்டமின் சி குறைபாடு உள்ளவர்களுக்கு ஈறுகளில்
கேண்டிடா என்னும் ஈஸ்ட் உயிரியால் தொற்று ஏற்படும். அதிக அளவு நோய்
எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை
ஏற்படக் கூடும். இதுவும் முத்தத்தின் மூலம் பரவக் கூடியதே. அடிக்கடி வாய்
உலர்ந்து போகிறவர்களின் வாயில் மற்றவர்களைவிடவும் நான்கு மடங்கு
எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதையும் நினைவில்
வைக்கவேண்டும்.
கிளாமிடியா, கொனேரியா போன்ற பால்வினை நோய்க்
கிருமிகளும் வாய்மீது வாய் வைத்து அழுந்தக் கொடுக்கும் முத்தத்தின் மூலம்
பரவ வாய்ப்பு இருக்கிறது. பாலியல் தொழிலாளிகளுக்கு வாயில் முத்தம்
கொடுப்பதால் இந்த மாதிரி கொடிய நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இவை மலட்டுத் தன்மையையும் ஏற்படுத்தக்கூடும்'' என்கிறார் சுந்தரமூர்த்தி.
உமிழ்நீருக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும்
ஆற்றல் உண்டு. உமிழ்நீரில் இருக்கும் லைசோஸைம் போன்ற வேதிப்பொருட்களுக்கு,
தீங்கு செய்யும் நுண் உயிர்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. ஆனால், நன்மை
செய்யும் பாக்டீரியாக்கள் சிலவற்றை இது அழிப்பதில்லை. உரிய துணை/இணைக்கு
மட்டுமே முத்தம் கொடுப்பதன் மூலமும் முத்தமிடும் முன்னும் பின்னும் வாயைச்
சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முத்தத்தினால் வரும் நோய்களின் தொற்றை
முற்றாகத் தவிர்க்கலாம். எனவே 'இச்’சுக்கு முழுவதுமாகத் தடா போட வேண்டிய
அவசியம் இல்லை. எச்சரிக்கையோடு இருந்தால் நீங்களும் கமல் ஹாசன்தான்!
Subscribe to:
Posts (Atom)