Pages

Monday, March 31, 2014

குழந்தையின்மைக்கு என்ன காரணம்-டாக்டர்.நாராயணரெட்டி

'என்ன சார் வீட்டுல விசேஷம் உண்டா?’ 
- திருமணம் ஆன ஆறாவது மாதத்தில் இருந்து பல ஜோடிகளைத் துரத்த ஆரம்பிக்கும் கேள்வி இது.
இப்போதைக்குக் குழந்தை வேண்டாம் என்கிற கவலையின்றி அந்த ஜோடி இருந்தாலும்... 'அவர்கள் சந்தோஷமாக இல்லை’ என்றே மொழிபெயர்த்துக்கொள்ளும் இந்தச் சமூகம். திருமணம் முடிந்தவுடன் 'ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள சில காலம் எடுத்துக்கொள்ளலாமே’ என்று நினைத்துக்கூட பல தம்பதிகள் குழந்தைப் பிறப்பை தற்காலிகமாகத் தள்ளிப்போடுவது உண்டு. நாம் அந்த ஏரியாவுக்குள் போகவில்லை. பொதுவாக ஒரு தம்பதிக்கு ஏன் குழந்தை பாக்கியம் இல்லாமல்போகிறது என்ற கேள்விக்கு மட்டும் விடையைத் தேடுவோம்.
பொதுவாக, குழந்தை உண்டாகாமல் இருக்க ஓர் ஆண் எப்படி காரணமாகிறான்?
1. விறைப்புத்தன்மை ஏற்படுவதில் சிக்கல், ஆண் உறுப்பைப் பெண் உறுப்புக்குள் செலுத்துவதற்கு முன்பே தீவிர துரிதஸ்கலிதம் எனப்படுகிற விந்து முந்துதல் போன்ற பாலியல் பிரச்னைகள் இருக்கலாம்.
2. ஓர் ஆணுடைய 1 மி.லி. விந்தில் 20 மில்லியன் உயிர் அணுக்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். அத்துடன் உயிர் அணுக்கள் நல்ல நகர்வுத்தன்மை கொண்டவையாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றாலும் பிரச்னைதான்.
3. சில ஆண்களுக்கு 'ஹைபோஸ்பாடியாஸ்’ (Hypospadias) என்கிற பிறவிக் குறைபாடு இருக்கும். அதாவது ஆணின் பிறப்பு உறுப்பில் இருக்கும் சிறுநீர்த் தாரை (சிறுநீர் வெளியாகும் துளை) நேராக இல்லாமல் கீழ்ப்புறம் இருக்கும். இதனால், உடலுறவு சமயத்தில் ஆணின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளியாகும் விந்து நேராக பெண்ணின் பிறப்பு உறுப்புக்குள் செல்லாமல், பெண்ணின் பிறப்பு உறுப்பின் வாசலிலேயே வழிந்து வெளியேறிவிடும். இதனாலும் குழந்தை பிறப்பது தடைபடும்.
குழந்தை உண்டாகாமல் இருக்க ஒரு பெண் எப்படிக் காரணமாகிறாள்?
1. ஹார்மோன் கோளாறுகள் காரணமாக கரு முட்டை வெளியாவதில் பிரச்னை இருக்கும்.
2. தொற்றுக் கிருமி காரணமாக ஃபெலோபியன் குழாயில் அடைப்பு இருக்கலாம்.
3. கரு முட்டை வெளியாகி கருமுட்டைச் சுவரில் (எண்டோமெட்ரீயம்) வந்து ஒட்டிக்கொள்ளாது. இதற்கும் ஹார்மோன் பிரச்னைதான் காரணம்.
4. பெண் பிறப்பு உறுப்பில் இருக்கும் திரவங்கள் இயல்பாகவே அமிலத்தன்மை கொண்டவை. சில பெண்களின் பிறப்பு உறுப்பில் உள்ள இயல்பான அளவைவிட அதிகமான அமிலத்தன்மைகொண்ட திரவங்கள்... விந்தில் உள்ள உயிர் அணுக்களை அழித்துவிடுவதால், குழந்தை உருவாவதில் சிக்கல் ஏற்படலாம்.
5. கருப்பையில் சதைக் கட்டி (Fibroid) அல்லது சிஸ்ட் (Cyst)  எனப்படும் நீர்க் கட்டி ஏற்படலாம். இன்னும் சில பெண்களுக்குத் தேவைப்படும் அளவுக்குக் கருப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம்.
6. பிறப்பு உறுப்பில் ஏற்படும் காசநோயினால், கிருமித் தொற்று, ஃபெலோபியன் குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும். இதனாலும் குழந்தை பிறக்காமல் போகலாம்.
சில ஜோடிகளுக்கு அவர்களின் இரவுகள் தித்திப்பாக இருந்தாலும், முதிர்ச்சி அடைந்த கருமுட்டை வெளியாகும் சமயத்தில் உடலுறவுகொள்வதில் கோட்டை விட்டுவிடுவார்கள். இதனாலும் குழந்தை உருவாவது தள்ளிப்போகலாம்.
பொதுவாக கணவன் - மனைவி இருவருக்கும் மேற்சொன்ன எந்தக் குறைபாடும் இல்லாமல் இருந்தால், ஓர் ஆண்டுக்குள் 70-80 சதவிகித தம்பதிகளுக்குக் கட்டாயம் குழந்தை உண்டாகிவிடும். ஓர் ஆண்டுக்குப் பிறகும் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், மருத்துவரைப் பார்க்கலாம். திருமணம் ஆகும்போது பெண்ணுக்கு 35 வயதோ அல்லது அதற்கு மேலாகவோ இருந்தால் அவர்கள் ஆறு மாத காலம் மட்டும் பொறுத்திருந்து, அதன் பிறகு மருத்துவரைப் பார்க்கலாம்.
குழந்தை உருவாகாமல் இருக்க, தான் காரணம் இல்லை என்று பல சமயங்களில் கணவனும் மனைவியும் ஈகோ பிரச்னையில் முட்டிக்கொள்வார்கள். எனவே 'யாருக்கு முதலில் பரிசோதனை தேவை?’ என்கிற கேள்வி இங்கு முக்கியமாகிறது. கணவன் - மனைவி இரண்டு பேருக்குமே பரிசோதனை தேவை. எந்தெந்தப் பரிசோதனை தேவை என்பதை உங்கள் மருத்துவர்தான் முடிவு செய்வார்.
பரிசோதனைக்குப் பிறகு குழந்தை இல்லாத் தம்பதிக்குரிய நவீனச் சிகிச்சைகள் என்னென்ன?
 கருப்பை அடைப்பு, கட்டிகள் இருந்தால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.
நோய்த்தொற்று காரணம் என்றால், அந்தத் தொற்றுக் கிருமியை அகற்ற சிகிச்சை தேவைப்படும்.
 கருமுட்டை வெளிவரவில்லை என்றாலோ, விந்தணுக்களில் பிரச்னை என்றாலோ, கருவுறுதலுக்கான மருந்துகள் தந்து குணப்படுத்தலாம்.
 நவீனத் தொழில்நுட்ப முறையில் தம்பதியின் கருமுட்டையையும் விந்தணுவையும் வெளியே எடுத்து சேர்த்து, கரு உருவான பிறகு பெண்ணின் கருப்பையில் வைக்கலாம்.
 விந்து தானம் பெற்றும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் குழந்தை உண்டாகவில்லை என்றாலும்கூட பெண்ணுக்குப் பெண்மை இல்லை என்றோ, ஆணுக்கு ஆண்மை இல்லை என்றோ சொல்லிவிட முடியாது. ஏனெனில், குழந்தை உருவாகிற தன்மையும் செக்ஸில் ஈடுபடுகிற தன்மையும் வேறு வேறானவை. இரண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது!

No comments:

Post a Comment