Pages

Sunday, March 30, 2014

நாவைக் கட்டி... நோயை விரட்டி...


சாப்பாட்டில் இருக்கும் சகலமும்!
'முதுமையின் தொடக்கத்தில் அடி எடுத்துவைக்கும் அந்தப் பருவம் எல்லோருக்கும் நல்லபடி அமைய வேண்டும். வயது ஏற ஏற உடலில் பேசல் மெட்டாபாலிக் ரேட், செரிமான உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் வளைத்துக் கட்டிச் சாப்பிட்ட உணவுகள்கூட, வயிற்றுக்குச் சேராமல், ரத்த சோகை, உடல் பருமன், செரிமானக் கோளாறு, வயிற்றுப் புண், சர்க்கரை நோய், வாயுத் தொல்லை, மலச்சிக்கல் என உபாதைகள் கதவைத் தட்டும். ''நோயை அண்டவிடாமல் செய்ய முதலில் நாம் செய்ய வேண்டியது... நம் நாக்குக்குப் பூட்டு போடுவது. மருந்தின் மூலம் 36 சதவிகித நோய்களைக் கட்டுக்குள்வைக்க முடியும்'' என்கிறார் சீஃப் டயட் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி. 40 வயதினருக்கான உணவை அவரே பட்டியலிடுகிறார். 
எப்படிச் சாப்பிட வேண்டும்?
என்னதான் மிகவும் பிடித்தமான உணவாக இருந்தாலும், அளவோடுதான்  சாப்பிட வேண்டும். வயிற்றைப் பொறுத்தவரை உணவு பாதி, தண்ணீர் கால் பங்கு, கால் பங்கு காலியாக இருக்க வேண்டும். அசைவப் பிரியர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். உடன், செரிமானத்தை ஊக்குவிக்கும் பொருட்களைச் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது நல்லது. மூன்று வேளை உணவை ஐந்து வேளையாகப் பிரித்து உண்ண வேண்டும். வயிறு முட்ட சாப்பிடவே கூடாது. இரவில் சிற்றுண்டிதான் நல்லது. எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளைச் சாப்பிடலாம். சாதத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. இரவு படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டுவிட வேண்டும்.  
நோய்களைத் தடுக்க...
 எலும்பு அடர்த்தி தேய்மானம் ஏற்படும்போது 'ஆஸ்டியோபொரோசிஸ்’ தாக்கலாம்.  இதனால் அடிக்கடி எலும்பு முறிவு ஏற்படக்கூடும். கால்சியம், வைட்டமின் டி சத்து நிறைந்த பால், கீரை, அசைவ உணவுகள் உட்கொள்வதன் மூலமும், சருமத்தில் சூரிய ஒளிபடுவதன் மூலமும் இதைத் தடுக்கலாம்.  
 எங்காவது அடிபட்டால், விழுந்தால், சிலருக்கு ரத்தம் உறையாமல் இருக்கும். உடலில் வைட்டமின் கே பற்றாக்குறைதான் இதற்குக் காரணமாக இருக்கும். பச்சைக் காய்கறிகள், பசலைக் கீரை சாப்பிடுவதன் மூலம் இதைத் தடுக்கலாம்.  
உணவு சாப்பிட்ட பிறகு அல்லது பசி எடுக்கும்போது வயிற்றில் எரிச்சல், வயிற்றுப் புண் வரலாம். மூன்று வேளையும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மற்றும் இரவில் சாப்பிடாமல் இருக்கவே கூடாது.  
 மொச்சை, காராமணி, கோஸ், காளிஃப்ளவர், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகள் சிலருக்கு வாயுத் தொல்லையை அதிகரிக்கச் செய்யும். அவற்றைத் தவிர்ப்பது நல்லது.  
 அதிக டென்ஷன், அதிகமான உடலுக்கு உழைப்பு இல்லாததுபோன்ற காரணத்தாலும் அசிடிட்டி வரலாம். கார, எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து நேரத்துக்கு உண்ணப் பழக வேண்டும்.
 நார்ச் சத்து உணவுகளை அதிகம் சேர்த்துகொள்வது, அதிகத் தண்ணீர் அருந்துவதன் மூலம் மலச் சிக்கல்பிரச்னையை விரட்டலாம்.
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தைத் தவிர்த்து, கொய்யா, பேரிக்காய், ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களைச் சிறிதளவு சாப்பிடலாம்.
 வறுத்து பொரித்த எண்ணெய் பதார்த்தங்களைத் தொடவே கூடாது. விசேஷ நாட்களில் வீட்டில் செய்த பதார்த்தங்களை சிறிதளவு சாப்பிடலாம்.  உண்ணும் உணவில் அடங்கி உள்ள கொழுப்பு மற்றும் தேவையற்ற சத்துக்களும் உடலில் ஏற்படும் ஜீரண மாற்றத்தால் முழுவதுமாக எரிக்கப்படாமல் உடலில் ஏதேனும் ஓர் இடத்தில் தங்கி உடல் பருமனை உண்டாக்கிவிடும். இடுப்பு, வயிறு போன்ற தேவையற்ற பகுதிகளில் தசையுடன் சேர்ந்து அழகையே கெடுத்துவிடும்.  
  பீட்சா, பர்கர், பரோட்டா, சமோசா போன்றவற்றைத் தவிர்த்துவிட வேண்டும்.  
 சாப்பிடுவதற்கு முன்பு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிட்டால், நன்றாகப் பசித்து சாப்பிடமுடியும்.
 சாப்பிட்டவுடன் படுக்கச் செல்வது ஆரோக்கியத்துக்கு கெடுதல். உடல் எடை கூடுவதுடன் ஒபிசிட்டி ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
 உண்ணும் உணவுக்கும் மனதுக்கும் சம்பந்தம் உண்டு என்பதால், சமையலறைக்குள் நுழையும்போதே சங்கடங்களைக் களைந்துவிடுங்கள். உற்சாகமான மனநிலையில் சமைக்கும் பதார்த்தங்கள், படு ருசியாக இருக்கும் என்பது கண் கண்ட உண்மை. பெரும்பாலான வீடுகளில் இசையைக் கேட்டபடி சமைப்பதைப் பார்க்க முடியும்.  இன்னிசையைக் கேட்கும்போது, சஞ்சலங்கள் நீங்கி சமையலும் கமகமக்கும்.  
தரமான உணவு, அளவான உணவு, போதிய உடற்பயிற்சி, போதும் என்கிற மனம் இந்த நான்கும் இருந்தால் பெரும்பாலான நோய்கள் நம்மை அண்டாது.

No comments:

Post a Comment